Latest News



கற்ற அறிவையும், பெற்ற செல்வத்தையும் இறுதிக் காலம் வரை மற்றவர்களுக்காகச் செலவிடுங்கள்.
Showing posts with label முக்கிய இடங்கள். Show all posts
Showing posts with label முக்கிய இடங்கள். Show all posts

July 8, 2017

இந்த திருநெல்வேலி அருவியில் ஆண்டுமுழுவதும் குளிக்கலாம்!


அருவியில் குளிப்பது என்பது மகிழ்ச்சியான அனுபவம். மனதுக்கும் உடலுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும் அந்த அனுபவத்துக்காக அருவிகளுக்கு சுற்றுலா செல்பவர்களின் எண்ணிக்கை எப்போதுமே அதிகரித்து வருகிறது. ஆனால், அருவிகளில் தண்ணீர் கொட்ட வேண்டும் என்றால் உரிய சீசன் இருக்க வேண்டுமே? ஆனால், அது மாதிரியான கவலை எதுவுமே இல்லாமல் அருவிக் குளியலுக்கு செல்ல வேண்டுமானால் மறு சிந்தனையே இல்லாமல் மணிமுத்தாறு அருவிக்கு செல்லலாம். இப்போது மழை சீசனா? அருவியில் தண்ணீர் விழுமா என்கிற கவலையே உங்களுக்கு தேவையில்லை. வருடம் முழுவதுமே இந்த அருவியில் தண்ணீர் கொட்டிக் கொண்டிருக்கும். மழைக் காலத்தில் தண்ணீர் அதிகம் விழுந்தால் வனத்துறை அதிகாரிகள் குளிப்பதற்கு தடை விதித்து விடுவார்கள். அதைத் தவிர, எப்போதும் நம்பிச் செல்லக் கூடிய அருவி மணிமுத்தாறு.



நெல்லை மாவட்டம், கல்லிடைக்குறிச்சிக்கு அருகில் இருக்கும் இந்த அருவியானது திருநெல்வேலியில் இருந்து 48 கி.மீ தொலைவில் இருக்கிறது. பேருந்து வசதியும் உண்டு. வாகனத்தில் செல்வதாக இருந்தால் ஒன்றரை மணி நேரம் ஆகலாம். மாஞ்சோலை எஸ்டேட் செல்லும் வழியில் இந்த அருவி இருக்கிறது. மணிமுத்தாறு அணைக்கட்டு பகுதியில் வனத்துறை சோதனைச்சாவடி இருக்கிறது. அதில் அனுமதிச் சீட்டு பெற வேண்டும். வாகனத்துக்கு 50 ரூபாயும் நபருக்கு 10 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கிறார்கள். கேமரா கொண்டு செல்ல வேண்டுமானால் அதற்கு தனியாக 50 ரூபாய் வசூலிக்கிறார்கள். மலையில் காடுகளைக் கடந்து சென்று இந்த அருவியை அடைய வேண்டும்.



தூரத்தில் இருந்து அருவியைப் பார்த்தால் ‘இது ஒன்றும் பிரமாண்டமாக இல்லையே?’ என்கிற எண்ணம் ஏற்படக் கூடும். ஆனால், அருவியில் தலையை காட்டியதும் தான் அந்த தண்ணீரின் அருமையை புரிந்து கொள்ள முடியும். நீண்ட தொலைவில் உள்ள உயர்ந்த மலைகளில் இருந்து அரிய மூலிகைகளின் ஊடாக ஓடி வரும் இந்த தண்ணீர் உடலில் பட்டதுமே மெய்சிலிர்க்க வைக்கும். தலையில் சில்லிட வைக்கும் இந்த அருவியில் நனைந்தவர்கள் வெளியே வரவே மனமில்லாமல் குளித்துக் கொண்டிருப்பார்கள். கொட்டும் அருவியை  இரண்டாகப் பிரிக்கும் மலைப்பகுதியில் ஒரு பகுதியில் ஆண்களும் மற்றொரு இடத்தில் பெண்களும் குளிக்கிறார்கள். எப்போதும் தண்ணீர் கொட்டும் இந்த அருவியில் குளிக்க வருபவர்கள் தங்கள் உடமைகளை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டும். காரணம், குரங்குகள்!



கண்ணிமைக்கும் நேரத்தில் கையில் இருக்கும் பொருளை சட்டென பிடுங்கிக் கொண்டு மரத்தின் உச்சிக் கொண்டு சென்றுவிடும் என்பதால் கவனம் அவசியம். அத்துடன், மிக முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னொரு தகவல் இருக்கிறது. அதாவது, அருவியில் குளிக்கும் உற்சாகத்தில் இருக்கும் சிலர், தங்களுக்குத் தான் நன்றாக நீச்சல் தெரியுமே என்கிற எண்ணத்தில் அருவியின் அருகில் இருக்கும் தடாகத்தில் குதித்து குளிப்பார்கள், அதில் இருக்கும் ஆபத்தை அறியாமல். அதனால் இது போன்ற சாகசங்களில் ஈடுபடுவதை கட்டாயம் தவிர்த்து விட வேண்டும்.

மனதை கொள்ளை கொள்ளும் அருவியையும் அதன் புத்துணர்வையும் அனுபவிக்க நினைப்பவர்கள் எந்த சீசனுக்காகவும் காத்திருக்காமல் எப்போதும் தாராளமாக செல்லலாம். அதனால், உங்களுக்கு வசதிப்படும் நேரத்தில் அங்கு செல்ல இப்போதே டிக்கெட்டை புக் செய்து கொள்ளுங்கள்.  

June 29, 2017

இந்தியாவில் தேனிலவுக்கு ஏற்ற சிறந்த இடங்கள்..!


தேனிலவு என்றாலே வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் அவற்றையெல்லாம் விட இயற்கையான சூழ்நிலையுடன், அருமையான இடங்கள் இந்தியாவில் எவ்வளவோ இருக்கின்றன.

June 27, 2017

அசத்தும் ஆருயிர் நண்பர்களாக வாழ்ந்து வரும் சிங்கம் - புலி


கடந்த 2004ம் ஆண்டு சாலையோர பூங்காவிலிருந்து கேமரூன் என்ற சிங்கத்தையும், சாபு என்ற புலியையும் குழு ஒன்று மீட்டது. ஏனெனில், சிங்கம் மற்றும் புலியின் உரிமையாளர்கள், இவைகளை இனசேர்க்கையில் ஈடுபடுத்தி லைகர் குட்டிகளை உருவாக்க முயற்சித்ததால் குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. சிங்கம், புலியை மீட்டு வந்து 12 ஆண்டுகள் ஆகியும், இன்றும் ஆருயிர் நண்பர்களாக வாழ்ந்து வருகின்றன.

June 22, 2017

பாம்பு சாபத்தால் படிப்புக்கு தடா சத்தியமங்கலம் அருகே வினோதம்


'பாம்பு சாபத்தால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம்' என, பெற்றோர் முரண்டு பிடிக்கும் வினோதம், சத்தியமங்கலம் அருகே நடக்கிறது.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் கொமராபாளையம் பஞ்சாயத்திற்கு உட்பட்டது நரிக்குறவர் காலனி. இங்கு, 50 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் குடும்பத்துடன் சென்று தேன், பாசி மணி உள்ளிட்டவற்றை விற்பனை செய்கின்றனர்.காலனியில், படிக்கும் வயதில், 19 குழந்தைகள் உள்ளன. இவர்கள், அரை கி.மீ., துாரத்தில் உள்ள, எம்.ஜி.ஆர்., நகர் பள்ளிக்கு கடந்த ஆண்டு சென்றனர். சில நாட்கள் மட்டும் சென்ற குழந்தைகள், பின் பள்ளி பக்கமே வருவதில்லை.

சத்தியமங்கலம் வட்டார வள மைய அதிகாரிகள், நரிக்குறவர் காலனிக்கு சென்று, காலனி தலைவர் பன்குடியிடம், குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு அனுப்புமாறு கூறினர். அதற்கு தலைவர் உள்ளிட்ட பெற்றோர், 'எங்கள் இனத்தவர்களுக்கு பாம்பு என்பது சாபம். பாம்புக்கும் எங்களுக்கும் ஆகாது. பள்ளிக்கு செல்லும் அரை கி.மீ., துாரம் காட்டு பகுதி. இங்கு பாம்புகள் நடமாட்டம் உள்ளன. பாம்புகளால் குழந்தைகளுக்கு ஆபத்து வரக்கூடாது என்பது எங்களின் எண்ணம்.

குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. பாம்பு சாபத்தை நினைத்தால் பயமாக உள்ளது. பள்ளியில் குழந்தைகளுக்கு சரிவர உணவு கிடைப்பதில்லை. நரிக்குறவர் காலனியிலேயே, ஒரு பள்ளி அமைத்து, ஆசிரியர் நியமனம் செய்தால், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம்' என்றனர்.

இதையடுத்து, மாவட்ட குழந்தை தொழிலாளர் பாதுகாப்பு அலுவலர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் துணையுடன் சென்று, மீண்டும் நரிக்குறவர் காலனி பெற்றோரிடம் பேசினர். ஆனால், அவர்கள் முடிவில் உறுதியாக இருக்கின்றனர்.

June 15, 2017

வேடிக்கை... விளையாட்டு... பொழுதுபோக்கு பூங்கா!


இன்றைய குழந்தைகளை திருப்திப்படுத்த பெற்றோர் படாதபாடு படவேண்டியுள்ளது. அதிலும், வேடிக்கை... விளையாட்டு பொழுது போக்குகள் கொண்ட இடங் களுக்கு அழைத்துச் செல்லுங்கள் என கட்டாயப்படுத்தும் குழந்தைகள் இன்று அதிகமாகி விட்டன. இவற்றிற்குள் நுழைய நிறைய செலவு செய்ய வேண்டியுள்ளது! ஆனால், குழந்தைகள் திருப்தி தானே முக்கியம்.
இந்தியாவில் இன்று பெரிய நகரங் களில் இத்தகைய பொழுதுபோக்கு பூங்காக்கள் ஏற்கெனவே வந்துள்ளன. ஆனால், இவற்றில் இந்தியாவிலேயே சிறந்தவை எவை என அறிந்து, காசு போனாலும் போகுது என அதனுள் நுழைந்து பார்த்து வரும் திருப்தி இருக்கிறதே... அதன் சுகமே தனிதான்...! இந்த வகையில் கீழ்கண்ட ஆறு பூங்காக்கள் மிகச் சிறந்தவை.

ஈசல் வேர்ல்ட் அண்ட் வாட்டர் கிங்டம் - மும்பை
இது 1986ல் திறக்கப்பட்டது. இந்தியாவின் மிகப் பழைய பொழுது போக்கு பூங்கா இதுதான். வாட்டர் கிங்டமுடன் இணைந்து உருவாக்கப் பட்டது. இந்தியாவிலேயே மிகப்பெரியது. இந்த பூங்காவிற்கு வருடா வருடம் 2 மில்லியன் பேர் வருகை தருகின்றனர். இதனுள் ஐஸ் ஸ்கேட்டிங் செய்யும் வசதியும் உள்ளது.
கட்டணம்: பெரியவர்களுக்கு 1000 ரூபாய், சிறுவர்களுக்கு 790 ரூபாய், முதியவர்களுக்கு 390 ரூபாய்!

ஒண்டர்லா - பெங்களூரு!
பெங்களூரிலிருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு ஜாலி ரைடுகள் உள்ளன. இதில் கிட்ஸ் ரைட்ஸ்; வாட்டர் ரைட்ஸ், ட்ரை ரைட்ஸ் மற்றும் ஹை த்ரில் ரைட்ஸ் உட்பட பல ரைட்ஸ்கள் உள்ளன.
லேசர் வெளிச்சத்தில் எலக்ட்ரானிக் சிஸ்டம் மூலம் பெய்விக்கப்படும் மழையில் நின்று, மழை டிஸ்கோ நடனம் ஆடலாம். இங்கு தங்கி, ரசித்துச் செல்ல ஏதுவாய் தங்குமிடங்கள் உண்டு.
நிறுவன கான்பரன்ஸ்கள் நடத்த ஏதுவாய் 1000 பேர் அமரும் பெரிய ஹால் உள்ளது.
கட்டணம்: பெரியவர்களுக்கு 770 ரூபாய், குழந்தைகளுக்கு 620 ரூபாய்.
வாரக் கடைசி மற்றும் விடுமுறை நாட்களில் பெரியவர்களுக்கு 940 ரூபாய், குழந்தைகளுக்கு 710 ரூபாய்...

எம்.ஜி.எம்.டிசி வேர்ல்ட் - சென்னை
கோடை காலத்தில் சென்னை மக்கள் பொழுது போக்க சிறந்த இடம்! நீச்சல் குளங்கள், உலர்ந்த மற்றும் தண்ணீரில் சவாரி... குழந்தைகளுக்கு "எம்.ஜி.எம்., மினி வீடு' என்ற பெயரில் தனி வசதி. இங்கும் மழையில் டிஸ்கோ நடனம் ஆடலாம்! செயற்கையாக உருவாக்கப்பட்ட ஏரியில் படகு சவாரி செய்யலாம்! சிறுவர்களுக்கு போரடிக்காமல் இருக்க வீடியோ கேம்ஸ் பிரிவும் உண்டு.
கட்டணம்: மெகா: பெரியவர்களுக்கு 799 ரூபாய்; குழந்தைகளுக்கு 577 ரூபாய்.
ஜம்போ: பெரியவர்களுக்கு 550 ரூபாய்; குழந்தைகளுக்கு 450 ரூபாய்.

பன் என் புட் கிராமம் - குர்காவுன்!
டெல்லியில் மிகப் பழைய மற்றும் நன்கு தெரிந்த பொழுது போக்கு பூங்கா! இதில் 21 விதமான சவாரிகள் உண்டு. இங்கும் மழையில் டிஸ்கோ டான்ஸ்... தண்ணீரில் சறுக்கி இறங்குதல், தண்ணீரில் விளை யாட்டு பகுதி, நீச்சல் குளங்கள், டிபன் கடைகள், உணவகங்கள் என எல்லாம் உண்டு!
கட்டணம்: திங்கள் முதல் சனி வரை: தம்பதிக்கு 1700 ரூபாய். குழந்தைகளுக்கு 600 ரூபாய்...
ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் 100 ரூபாய் கூடுதல். பெரியவர்கள் தனியாய் வந்தால் 1100 ரூபாய்!

வேர்ல்ட்ஸ் ஆப் ஒன்டர்ஸ்!
நொய்டாவில் உள்ள க்ரேட் இந்தியா ப்ளேஸ் மால் அருகில் உள்ளது. மாதத்திற்கு 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் விஜயம் செய்கின்றனர். முக்கியமான காரணம்... வெயிலிலிருந்து தப்ப!
நொய்டாவில் உள்ள, "நேஷனல் கேபிடல் ரீஜன்' அருகே அமைந்துள்ளது.
கட்டணம்: பெரியவர்களுக்கு 879 ரூபாய். குழந்தைகளுக்கு 699 ரூபாய். முதியவர்களுக்கு 499 ரூபாய்!

நிக்கோ பார்க் - கொல்கத்தா
எஸ்.ஏ.8000 சான்றிதழ் பெற்ற உலகின் முதல் பொழுதுபோக்கு பூங்கா. இதற்கு ஐ.எஸ்.ஓ. 14001 சான்றிதழும் கிடைத்துள்ள முதல் இந்திய பொழுது போக்கு பூங்கா இதுதான்... தரத்திற்கான ஐ.எஸ்.ஓ.9001ம் சான்றிதழும் பெற்றுள்ளது.
கட்டணம்: ஒரு நபருக்கு 500 ரூபாய்.

March 3, 2017

ஊர் கூடி, பங்கு வைத்து விவசாயம் காரைக்குடி அருகே விவசாயிகள் அசத்தல்


காரைக்குடி அருகே 6 கிராம விவசாயிகள் ஒருங்கிணைந்து தண்ணீரை பங்கு வைத்து விவசாயம் செய்து அசத்துகின்றனர். விலங்குகளிடம் இருந்து பாதுகாக்க 250 ஏக்கருக்கும் கம்பி வேலி அமைத்துள்ளனர்.காரைக்குடி அருகே வ.சூரக்குடி புக்குடி கண்மாய் மூலம் 250 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. இங்கு சூரக்குடி, சொக்கம்பட்டி, நங்கம்பட்டி, பூவாண்டிபட்டி, இடையன்குடிபட்டி, சொக்கானேந்தல் ஆகிய 6 கிராம விவசாயிகள் விவசாயம் மேற்கொள்கின்றனர்.

இவர்கள் ஆடு, மாடுகள் செல்லாத வகையில் விவசாய நிலங்களை சுற்றிலும் 3.5 கி.மீ., க்கு கம்பி வேலி அமைத்து பாதுகாக்கின்றனர். ஒரே ஒரு பகுதியில் மட்டும் விவசாயிகள் நிலங்களுக்கு சென்று, வரும் வகையில் நுழைவாயில் அமைத்துள்ளனர்.

நிலங்களுக்கு கண்மாய் நீரை திறந்துவிட காவலாளிகள் நியமித்துள்ளனர். அவர்கள் பங்கு வைத்து முறைப்படி தண்ணீர் திறந்து விடுகின்றனர். அவர்களை தவிர வேறு யாரும் தண்ணீர் பாய்ச்ச முடியாது. அனைவரும் நெல் சாகுபடி செய்கின்றனர். கோடையில் தண்ணீர் இருந்தால் உளுந்து பயிரிடுகின்றனர். அதிலும் கண்மாயில் இருக்கும் நீரின் அளவை பொறுத்தே சாகுபடி பரப்பும் நிர்ணயிக்கப்படுகிறது.

பெரும்பாலும் கோடையில் தண்ணீர் சிக்கனத்திற்காக ஒவ்வொரு விவசாயியும் தங்களது நிலத்தில் 6 ல் ஒரு பங்கு மட்டுமே சாகுபடி செய்கின்றனர். கோடையிலும் காவலாளிகள் தான் தண்ணீர் பாய்ச்சுகின்றனர்.சூரக்குடியைச் சேர்ந்த பி.சண்முகம் கூறியதாவது: கண்மாயில் உள்ள மடைகருப்பர் கோயிலில் சாமி கும்பிட்டு, காவலாளிகளிடம் மண்வெட்டியை கொடுத்துவிடுவோம். நாங்கள் தண்ணீர் பாய்ச்ச மண்வெட்டி எடுக்க மாட்டோம். அறுவடையின்போது காவலாளிகளுக்கு நிலத்துக்கு தகுந்த கூலி (நெல்) வழங்குவோம். விவசாயத்தை உயிர்நாடியாக நினைத்து வாழ்கிறோம். தண்ணீர் இல்லாத காலத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. 250 ஏக்கருக்கும் 2 'போர்வெல்கள்' அமைத்தால் போதும். இதற்கு அரசு நிதியுதவி அளிக்க வேண்டும், என்றார்.

December 13, 2016

ஜெயலலிதா அதிமுக பொதுச்செயலாளர் ஆனது இப்படித்தான்’: கடந்து வந்த பாதையை விவரிக்கிறார் திருநாவுக்கரசர்



சரித்திரம் திரும்புகிறது’…. இந்த வார்த்தைகள் எதற்கு பொருந்து கிறதோ இல்லையோ? அதிமுக வுக்கு கச்சிதமாகப் பொருந்தும். கடந்த மே மாதம் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக தனித்துப் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. எம்.ஜி.ஆர். காலத்துக்குப் பின், 32 ஆண்டுகள் கழித்து தொடர்ந்து 2வது முறையாக ஆட்சியை அதிமுக கைப்பற்றியதன் மூலம் ‘சரித்திரம் திரும்புகிறது’ என்று கூறப்பட்டது.

முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். மறைந்தவுடன் அதிமுக வுக்கு அடுத்த தலைவர் யார்? கட்சியையும் ஆட்சியையும் வழி நடத்தப் போவது யார்? என்ற கேள்வி எழுந்தது. இப்போது, முதல்வராக இருந்த ஜெயலலிதா மறைந்துவிட்ட நிலையில், அதிமுக வில் மீண்டும் அதே சரித்திரம் திரும்பியிருக்கிறது!

எம்.ஜி.ஆர். இறந்தபோதும் இதுபோல இக்கட்டான சூழலை கட்சி எதிர்கொண்டது. அப்போது கட்சிக்குள் வெளிப்படையாகவே இரண்டு கோஷ்டிகள் கொடி தூக் கின. ஒரு கோஷ்டிக்கு தலைவர் ஜெயலலிதா, இன்னொரு கோஷ்டிக்கு தலைவர் ஜானகி எம்.ஜி.ஆர்.. ஜெயலலிதாவை திரு நாவுக்கரசர் (காங்கிரஸ் கட்சியின் இப்போதைய தமிழக தலைவர்), பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்ட அமைச்சர்களும் ஜானகியை ஆர்.எம்.வீ உள்ளிட்ட மூத்த அமைச் சர்களும் பின்னால் இருந்து இயக்கி னார்கள். முதலில் ஜானகியின் பக்கம் இருந்த கட்சி அதிகாரம் ஒரே தேர்தலில் ஜெயலலிதாவின் தலைமைக்கு மாறியது.

அந்த நேரத்தில் ஜெயலலி தாவை தலைமை பொறுப்பிற்கு கொண்டு வருவதற்காக மேற்கொள்ளப்பட்ட அரசியல் நகர்வுகளை ‘தி இந்து’ விடம் பகிர்ந்து கொண்டார் திரு நாவுக்கரசர். இதோ அவரது கடந்த கால நினைவுகள்…

‘‘எம்.ஜி.ஆர். உயிருடன் இருந்த போதே கட்சிக்குள் ஜெயலலிதா அணி, ஆர்.எம்.வீ. அணி என இரண்டு கோஷ்டிகள் பட்ட வர்த்தனமாக இருந்தது. 25 அமைச் சர்கள் ஆர்.எம்.வீ. பக்கம் இருந் தார்கள். நான், பண்ருட்டி ராமச் சந்திரன், நெடுஞ்செழியன், அரங்க நாயகம், கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மட்டுமே ஜெயலலி தாவுக்கு ஆதரவாக இருந்தோம்.

உடல் நலக்குறைவால் அப்போ லோவில் எம்.ஜி.ஆர். அட்மிட் செய்யப்பட்டிருந்த நேரம். எம்.ஜி.ஆரை அப்போலோவிலிருந்து அமெரிக்காவுக்கு கொண்டு செல் லப் போகிறார்கள் என்றதுமே, ‘நீங்கள் ஒருமுறை போய் தலைவரை பார்த்துவிட்டு வந்து விடுங்கள்’ என்று நான் ஜெயலலிதாவிடம் சொன்னேன். நான்தான் அவரை அப்போ லோவிற்கு அழைத்துச் சென்றேன். ஆனால், அவர் எம்.ஜி,ஆரை பார்க்க முடியவில்லை.

எம்.ஜி.ஆர். அமெரிக்காவில் இருந்த போதே இங்கு தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. இதற்கு நடுவே, ஜெயலலிதாவை ஓரங்கட்ட நினைத்தவர்கள், கட்சியின் அதி காரப்பூர்வ நாளேடான ‘அண்ணா’ வில் ஜெயலலிதாவை தாக்கி கட்டுரைகளை வெளியிட வைத் தார்கள். இதை தாங்கிக்கொள்ள முடியாத ஜெயலலிதா, ‘நமக்கும் ஒரு பத்திரிகை வேண்டும்’ என்று சொன்னதால் ‘பொன்மனம்’ பத்திரிகையை தொடங்கினேன். எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியால் தொடங்கி வைக்கப்பட்ட ‘பொன்மனம்’ பத்திரிகை ஜெயலலிதாவின் கருத் துக்களை தாங்கி வந்தது.

1987 டிசம்பர் 24-ல் எம்.ஜி.ஆர். இறந்தபோது, மூத்தவர் என்ற அடிப்படையில் நெடுஞ்செழியன் முதல்வராக்கப்பட்டார். எம்.ஜி.ஆரின் உடல் ராஜாஜி ஹாலில் வைக்கப்பட்டிருந்தபோது அவரது தலைமாட்டில் ஜெயலலிதா நின்றார். இதை விரும்பாத சிலர், அங்கேயே அவருக்கு தொல்லை கள் கொடுத்தனர். ‘என்னை ஊசியால் குத்துகிறார்கள், காலால் மிதிக்கிறார்கள்’ என்று என்னிடம் ஜெயலலிதா சொன்னார். உடனே, போலீஸ் கமிஷனர் ஸ்ரீபாலை கூப்பிட்டு ஜெயலலிதா நிற்கும் பகுதியில் பெண் காவலர்களை பாதுகாப்புக்கு நிறுத்தும்படி சொன்னேன். ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் உடல் வைக்கப்பட்டிருந்த ராணுவ வாகனத்தில் அனுமதி இன்றி ஏற முற்பட்டார். அப்போது, ஜானகியின் அண்ணன் மகன் திலீபன், கே.பி.ராமலிங்கம் உள்ளிட் டவர்கள் அவரை ராணுவ வாகனத் திலிருந்து இறக்கி விட்டார்கள்.

ஒருவாரம் கழித்து கூட்டப் பட்ட கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் ஜானகியை பொதுச் செயலாள ராகவும் முதலமைச்சராகவும் தேர்வு செய்தார்கள். இதனால் கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டது. ஜானகியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அதி முக-வும் ஜா அணி, ஜெ அணி என இரண்டுபட்டது.

1989 தேர்தலில் ஜானகி அணி படுதோல்வி கண்டது. ஜெயலலிதா எதிர்க்கட்சி தலைவராகவும் நான் துணை தலைவராகவும் சட்டமன்றத் திற்குள் நுழைந்தோம். வெறுத்துப் போன ஜானகி, ‘எனக்கு கட்சியும் வேண்டாம்; பதவியும் வேண்டாம்’ என அரசியலுக்கு முழுக்குப் போட்டார். அதன்பிறகு மீண்டும் அதிமுக ஒன்றானது. அதன்பிறகு ஒருங்கிணைந்த அதிமுகவின் பொதுச்செயலாளரானார் ஜெய லலிதா. அடுத்து வந்த மதுரை, மருங்காபுரி இடைத் தேர்தல் களில் அதிமுக வெற்றி வாகை சூடியது.

இதன்பிறகு, எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகிய ஜெயலலிதா அந்தப் பொறுப்பை இடைத் தேர்தலில் வென்ற எஸ்.ஆர்.ராதாவுக்கு தந்தார். இதில் எனக்கு அவரோடு மன வருத்தம். என்னை கட்சியைவிட்டு நீக்கினார் ஜெயலலிதா. நானும் 7 எம்.எல்.ஏ-க்க ளும் சேர்ந்து எம்.ஜி.ஆர். அதிமுக-வை தொடங்கினோம். 1995-ல் வளர்ப்பு மகன் திருமணம் உள்ளிட்ட செயல்களால் ஜெயலலி தாவுக்கு மீண்டும் நெருக்கடி. அவரே என்னை மீண்டும் கட்சிக்கு வரும் படி அழைத்ததால் வந்தேன்.

1996 தேர்தலில் ஜெயலலிதா பர்கூரில் தோற்றார். நான் அறந் தாங்கியில் ஜெயித்தேன். என்னை கட்சியின் சட்டமன்ற கட்சி தலைவராக்கினார். அதே சமயம், தேர்தல் தோல்வியை ஏற்றுக்கொள்ள முடியாத அவர், ‘இனி நீங்களே கட்சியை நடத்திக் கொள்ளுங்கள் எனக்கு அரசியலே வேண்டாம்’ என்று விரக்தியுடன் சொன்னார். இப்படி பலநேரங்களில் அவர் சொல்லி இருக்கிறார். அவருக்கு தைரியம் கொடுத்து அரசியலில் நிலைக்க வைத்தோம். அதன் பிறகுதான் அரசியலின் உச்சத்தை அவர் தொட்டார்.’’

November 25, 2016

பள்ளிக்கரணை பங்கு போடப்பட்டது இப்படித்தான்...!


பள்ளிக்கரணை என்றால் அது ஒரு வளம் கொழிக்கும் ரியல் எஸ்டேட் ஹப் என்றுதான் நமக்கு நினைவுக்கு வரும். ஆனால், அது ஒரு இயற்கை வளம் கொழிக்கும் சதுப்பு நிலம். அதன் தன்மை அழிக்கப்பட்டது போல அது நம் நினைவுகளில் இருந்தும் அழிக்கப்பட்டு விட்டது.


தமிழகத்தில் உள்ள  3 சதுப்பு நிலங்களில் முக்கியமான ஒன்றாக பள்ளிக்கரணை இருக்கிறது. 4 மாதங்கள் தண்ணீர் நிறைந்தும், 8 மாதங்கள் காய்ந்த நிலையிலும் இருக்கும். பள்ளிக்கரணை  சதுப்பு நிலத்தைத் தேடி வெளிநாட்டுப் பறவைகளும் வருகின்றன. பல்வேறு கட்ட கோரிக்கைகளுக்கு பிறகு இப்போது இந்த நிலம் வனத்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மழையை தாங்கும் இயற்கை சூழல்

சென்னையில் எவ்வளவு மழை பெய்தாலும் அதனை தாங்கி, தேக்கி வைத்து கடலுக்கு அனுப்பும் இயற்கைச் சூழலை தன்னகத்தே கொண்டிருக்கிறது பள்ளிக்கரணை சதுப்பு நிலம். 6 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பரந்த அளவில் இருந்த இந்த சதுப்பு நிலம் கொஞ்சம் கொஞ்சமாக அரசு திட்டங்களுக்காக எடுக்கப்பட்டும், வீட்டு மனைகளாக மாற்றப்பட்டும், ஆக்கிரமிக்கப்பட்டும் வந்தது. இதன் விளைவாக இன்றைக்கு இதன் பரப்பளவு பத்தில் ஒரு பகுதியாக 600 ஹெக்டேர் அளவுக்கு சுருங்கி விட்டது.


சதுப்பு நிலத்தின் இயற்கை சூழல் அழிந்து விட்டதால்தான் சிறிய அளவு மழை பெய்தால் கூட சென்னை நகரும், புறநகர் பகுதிகளும் மிதக்கின்றன. அரசு முதல் தனியார் வரை சகட்டு மேனிக்கு ஆக்கிரமிப்பு செய்த தற்கு எதிராக பசுமை ஆர்வலர்கள் கொதித்தெழுந்து நீதிமன்றத்தின் கதவுகளை தட்டி வருகிறார்கள்.
இதன் விளைவாக,  பள்ளிக்கரணை சதுப்பு நிலப் பகுதியில் உள்ள நிலத்தைப் பதிவு செய்யவோ, விற்பனை செய்யவோ கூடாது என பத்திரபதிவுத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

பள்ளிக்கரணை

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் எப்படி கபளீகரம் செய்யப்பட்டது என்று விசாரித்தோம்.

துண்டு துண்டாக இருக்கிறது

சூழல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமனிடம் பேசினோம். "பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தைச் சுற்றி உள்ள 250 ச.கி.மீ பரப்பளவில்  பெய்யும் மழை நீரை உள்வாங்கி, பின்னர் அதனை கடலுக்கு அனுப்பும் இயற்கையான பணியை பள்ளிக்கரணை செய்து கொண்டிருந்தது.  கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்ற ஆக்கிரமிப்புகளுக்குப் பின்னால், இப்போது பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 600 ஹெக்டேர் பரப்பளவுக்கு இருக்கிறது என்று அரசு ஆவணங்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் 250 முதல் 300 ஹெக்டேர் வரைதான் இருக்கிறது. அதுவும் முழுமையாக இல்லை. துண்டு, துண்டாகத் தனித்தனித் தீவாகத்தான் இருக்கின்றன. சதுப்பு நிலத்தில் மழை காலங்களில்  4 மாதம் தண்ணீர் நிரம்பி இருக்கும். பின்னர் அது நிலப்பரப்பு போல தோற்றம் அளிக்கும். காய்ந்து இருந்தபோதுதான் ஆக்கிரமிப்புகள் நடந்திருக்கின்றன. எல்லாம் முடிவடைந்த பின்னர்தான் வனத்துறை வசம் கொடுத்தனர். எல்லா அரசு துறைகளும் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஆக்கிரமித்து இருக்கின்றன. இப்போது நுரையீரலை மட்டும் காப்பற்ற நினைக்கின்றனர்" என்றார்.

3 ஆண்டுகளில் முழுமையாக ஆக்கிரமிப்பு

கேர் எர்த் அமைப்பைச் சேர்ந்த ஜெயஶ்ரீ வெங்கட்ராமனிடம் பேசினோம்."சென்னையில் கடந்த ஆண்டு பெய்த வெள்ளத்துக்குப் பின்னர், சென்னையின் ஈரத்தன்மை எப்படி இருக்கிறது என்று நாங்கள் ஒரு ஆய்வு மேற்கொண்டோம். அதன்படி 1990-ம் ஆண்டு வரை 85 சதவிகித சென்னையின் பரபரப்பு எவ்வளவு மழை பெய்தாலும் உள்வாங்கி கொள்ளும் தன்மை கொண்டதாக இருந்தது. ஒரு நீர் நிலைக்கும் இன்னொரு நீர் நிலைக்கும் இடையே தொடர்ச்சி இருந்தது. 1990-ல் இருந்து மக்கள் வாழ்வதற்காக நீர் நிலைகளின் இயற்கைத் தன்மையோடு சமரசம் செய்து கொண்டோம். இப்போது சென்னையில் 15 சதவிகிதம் அளவுக்கு மட்டுமே மழை நீரை உள்வாங்கும் நிலம் உள்ளது.  2000-ம் ஆண்டு வரை அவ்வப்போது ஆக்கிரமிக்கப்பட்டு வந்த பள்ளிக்கரணை நிலம் 2002-ம் ஆண்டில் இருந்து 2005 வரை 3 ஆண்டு கால கட்டத்தில் மிக அதிகமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறது. அரசின் அனுமதியோடும், அரசின் அனுமதி இல்லாமலும் இந்த ஆக்கிரமிப்புகள் நடந்திருக்கின்றன. பள்ளிக்கரணையில் சில பகுதிகள் பட்டாவாகக் கொடுக்கப்பட்டன. சில பகுதிகள்  பட்டா நிலமாக மாற்றப்பட்டன. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சாலை அமைத்தது உட்பட அரசின் ஆக்கிரமிப்புகளும் அதிகம் நடந்திருக்கிறது" என்றார்.

சதுப்பு நிலத்தில் ஆர்.டி.ஓ அலுவலகம்

சோழிங்கநல்லூர் ஆர்.டி.ஓ அலுவலகம் அமைப்பதற்காக  அக்கரை கிராமத்தில் உள்ள சதுப்பு நிலத்தை காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் ஆக்கிரமித்திருக்கிறது. இதற்கு எதிராக ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த மீனவர் ஹரி கிருஷ்ணசேகர் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். அவரிடம் பேசினோம். " அக்கரைக் கிராமத்தில் அரசுக்குச் சொந்தமான 61 ஏக்கர்  சதுப்பு நிலம் இருக்கிறது. அந்த இடத்தில் 9 ஏக்கர் நிலத்தில் ஆர்.டி. ஓ அலுவலகம் கட்ட ஒதுக்கப்பட்டிருக்கிறது என்று எனக்குத் தெரியவந்தது. சிறிய வயதில் இருந்து அந்தப் பகுதியில் இருக்கின்றேன். அது ஒரு சதுப்பு நிலம். அங்கு மண்ணைக் கொட்டி மேடாக்கி கட்டடம் அமைத்தால், மழை பெய்யும் போது பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே, இதற்கு எதிராகப் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குத் தொடுத்தேன். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு நோட்டீஸ் அனுப்பப் பட்டது. ஆனால், இதன் பேரில் நீண்ட நாட்களாக காஞ்சிபுரம் மாவட்டம் சார்பில்  பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை. பின்னர் ஒரு கட்டத்தில் நீண்ட நாட்களாக பதில் அளிக்காததற்கு காஞ்சிபுரம் கலெக்டருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதன் பின்னர் தாக்கல் செய்த மனுவில், அது சதுப்பு நிலம்தான் என்றும்,  20 அடி உயரத்துக்கு மண்ணைக் கொட்டி கட்டடம் கட்ட உள்ளதாக கூறி இருந்தனர். இந்த சதுப்பு நிலம்  வருவாய்துறை வசம்தான் இருக்கிறது. அதை அப்படியே விட்டு விட வேண்டும். எந்த வித ஆக்கிரமிப்பும் செய்யக் கூடாது. வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும். இது தவிர இதே இடத்தில்  இசைக்கல்லூரிக்கும் 12 ஏக்கர் நிலம் ஒதுக்கி இருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். அதற்கு எதிராகவும் வழக்குத் தொடுக்க உள்ளேன்" என்றார்.  

October 17, 2016

இந்திய- சீன ராணுவத்திற்கு மத்தியில் ‘இயற்கை அன்னை’


-லடாக்!

இயற்கையின் இணையற்ற கொடை. நீலநிற வானமும், நீல நிற நதியும் தொட்டு விளையாடும் சொர்க்க பூமி. அதனால் இதன் சிறப்பை உலகமே பேசுகிறது.

லடாக்கில் அமைந்திருக்கும் ‘லே’ எனும் பகுதி மிக முக்கியமான சுற்றுலா தலம். இது இந்தியா-சீனாவிற்கு போக்குவரத்து வழித்தடமாகவும் இருக்கிறது. இதை உள்ளடங்கிய 480 சதுர கி.மீ. பரப்பளவு சர்ச்சைக்குரிய பகுதியாக விளங்குகிறது. லடாக் பகுதியில் சீன ராணுவ வீரர்கள் எல்லை தாண்டி வந்து கூடாரம் அமைத்து தங்குவது அவ்வப்போது நடக்கிறது. சர்ச்சை நீடித்தாலும் சுற்றுலா பயணிகள் வரவு குறையவில்லை.

மலைப்பிரதேசங்களில் மிக உயரத்தில் அமைந்திருக்கும் இடம், லே. அதனால் உச்சிக்கு செல்லச்செல்ல மூச்சுவிட சற்று சிரமமாக இருக்கும். சுவாச பிரச்சினை இருப்பவர் களுக்கு மூச்சுச் திணறல் மட்டுமின்றி தலை சுற்றல், மயக்கம் ஏற்படலாம். அதனால் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மருந்து, மாத்திரைகளை உடன் எடுத்து செல்வது நல்லது. அங்கேயும் மருத்துவ ஆலோசனை குழுக்கள் உள்ளன. அங்கு ஓரிரு நாட்கள் தங்கி விட்டால் இந்த பிரச்சினையெல்லாம் முடிவுக்கு வந்துவிடும். அங்குள்ள சூழலுக்கு பழகிவிடலாம்.

லடாக் பகுதி உணவு வகைகள் ஏறக்குறைய திபெத் நாட்டின் உணவுப்பழக்கத்தை ஒத்திருக்கும். துக்பா என்ற உணவு அங்கு பிரசித்தி பெற்றது. அது நூடூல்ஸ் சூப் போல் இருக்கும். அது தவிர பார்லியால் தயாரிக்கப்படும் உணவு வகைகளையும் வித்தியாசமாக சமைத்து, விசேஷ ருசியில் தருகிறார்கள்.

சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் கண்கவர் வண்ண திருவிழாக்கள் அங்கு நடக்கின்றன. அதை பார்ப்பது கண்கொள்ளகாட்சியாக இருக்கும். அவர்களின் பாரம்பரிய இசையும், நடனமும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரும்.

ஜூன் மாத விழாக்கள் மக்களின் சிந்தனைக்கு விருந்தளிக்கும். அந்த மாதம்தான் ‘ஹேமிஸ் உற்சவம்’ மற்றும் ‘சிந்து தர்ஷன்’ ஆகிய விழாக்கள் வெகு விமரிசையாக நடக்கும். அங்குள்ள மக்கள் சிந்து நதியை தங்கள் தாயாக வணங்குகிறார்கள். தங்களை வாழ வைக்கும் சிந்து நதிக்கு அப்போது பூஜை செய்து வணங்கி வழிபடுவார்கள்.

செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை லடாக் திருவிழா நடைபெறும். அதில் பிரபலமான கலைஞர்கள் பங்குபெற்று விதவிதமான கலை நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். பிப்ரவரி, ஜூலை, ஆகஸ்டு மாதங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் விழாக்கள் நடைபெறுகின்றன.

லடாக் பகுதியில் உள்ள கட்டிடங்களும் கலை அழகுமிக்கவை. அவை திபெத், இந்தியா, பவுத்த கட்டிட கலையை ஒருங்கிணைத்து பிரதிபலிக்கும். அவற்றுள் குறிப்பிடத்தக்கது ‘திக்ஸே மோனேஸ்டரி’ என்ற மடம். மிக நேர்த்தியாக இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அங்கு ஏராளமான புத்த பிக்குகள் வசிக்கிறார்கள். அவர்கள் கருஞ்சிவப்பு நிறத்திலான நீண்ட உடைகளை அணிந்திருப்பார்கள். பவுத்த சிறுவர்கள் அந்த உடையில் பார்க்க மிக அழகாக இருப்பார்கள். அழகு மட்டுல்ல, அங்கு நிலவும் குளிருக்கும் அது ஏற்ற உடை.

இந்த மடம் சிறு சிறு கோவில்களால் சூழப்பட்டுள்ளது. நடுவில் பெரிய கோவில் அமைந்திருக்கிறது. கோவிலை நாலாபுறமும் பெரிய மதில் சுவர்கள் கம்பீரமாக சூழ்ந்திருக்கிறது. அதனுள் பெரிய முற்றம் ஒன்று இருக்கிறது. அது மைதானம் போல் காணப்படுகிறது. அங்குதான் எல்லோரும் ஒன்று கூடி பிரார்த்தனை செய்கிறார்கள். உள்ளே இரண்டு மாடி உயரத்திற்கு பிரமாண்டமான புத்தர் சிலை ஒன்று இருக்கிறது. மேலிருந்து பார்த்தால் புத்தர் தலை மட்டும்தான் தெரியும். பால்கனியில் நின்று பார்த்தால்தான் சிலையின் மற்ற பகுதிகள் தெரியும்.

லடாக்கில் முக்கியமாக காணவேண்டியது, லே பேலஸ். இது ஒன்பது அடுக்குகளை கொண்ட பிரமாண்டமான அரண்மனை. இது நாம்க்யால் என்ற உயரமான பாறையின் மீது அமைந்திருக் கிறது. இதன் மற்றொரு சிறப்பு, இந்த அரண்மனை சிந்து நதிக்கரையில் வீற்றிருக்கிறது. 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அந்த அரண்மனையில் அரச குடும்பங்கள் வசித்து வந்தன. இப்போது அருங்காட்சியகமாக திகழ்கிறது. அங்கு அரசர்கள் பயன்படுத்திய ஆடை, ஆபரணங்கள், கவசம், கிரீடம், உடைவாள், சிம்மாசனம், அரசியின் அபூர்வ அணிகலன்கள் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு வைக்கப் பட்டுள்ளன. 450 வருடங்களுக்கு முந்தைய ஓவியங்களும் அங்குள்ளன.

லடாக்குக்கு பெருமை சேர்க்கும் சுற்றுலா தலங்கள்!

ஹேமஸ் குகை: அமைதியாக தியானம் செய்ய ஏற்ற வகையில் அமைக்கப்பட்ட அழகிய மடம் இது. இதை 1672-ம் ஆண்டு க்யாலவா எனும் மன்னர் நிர்மாணித்தார். இங்கு ஜூலை மாதம் வண்ணமயமான விழாக்கள் நடைபெறும். இந்த மடத்திற்கு அருகில் தேசிய உயிரின பூங்கா உள்ளது.



சாந்தி ஸ்தூபி: இது இயற்கை காட்சிகளால் சூழப்பட்ட அமைதியான இடம். அங்கு அமைந்திருக்கும் தூண் அனைவரையும் கவரக்கூடியது. தூணின் மேல் பகுதியில் இருந்து, லேயின் முழு அழகையும் தரிசிக்கலாம். தூண் பகுதிக்கு செல்ல 600 படிக்கட்டுகள் உள்ளன. படிக்கட்டுகளில் ஏறி செல்ல முடியாதவர் கள் சாலை மார்க்கமாகவும் பயணிக்க லாம்.

காந்தமலை: ‘மேக்னட்டிக் ஹில்’ எனப்படும் இது விசித்திரமான மலை. இங்கு வாகன பயணம் மேற்கொள்வது திரில்லிங்கானது. கவனமில்லாமல் சென்றால் ஆபத்தானது.

ஸ்டைங்கோங் இஸோ: இது அழகிய நதி. நீர் கண்ணாடி போன்று பிரதிபலிக்கும். மேலிருந்து பார்த்தால் தரைமட்டம் வரை துல்லியமாக தெரியும். வண்ண, வண்ண மீன்கள் கூட்டம் கூட்டமாக நீரில் உலாவதை பார்க்கும்போது மீன் தொட்டி நினைவுக்கு வரும். நதிக்கரையோரம் ஆங்காங்கே ராணுவ படையும், அவர்கள் தங்கும் கூடாரமும் தெரியும். இந்த நதி இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையில் ஓடுகிறது.

ஹால் ஆப் பேம்: கார்கில் போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களின் நினைவிடம் இது. இதன் ஒரு பகுதியில் ராணுவ வீரர்களின் வாழ்க்கை முறை, அவர்கள் அணியும் சீருடை, பனி பிரதேசத்தில் நடக்கும் பிரத்திகேய காலணி, அவர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு உணவு வகைகள், அவைகளை சமைக்கும் முறை, கடும் குளிரில் ரத்தம் உறையாமல் இருக்க கொடுக்கப்படும் மருந்து வகைகள் பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கும்.

ஹோரோவர் போர்ட்: சரித்திரத்தை அறியும் ஆர்வம் உடையவர்களை கவரும் கோட்டை இது. சரித்திர புகழ்வாய்ந்த இந்த கோட்டை ஜெனரல் ஜோராவர் சிங் நினைவாக கட்டப்பட்டது. இவர் இந்திய-சீன சண்டையில் ஹீரோவாக விளங்கியவர்.

இதை தவிரவும் அங்கு ரசித்து பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. லடாக் பகுதிக்கு சென்று வருவது வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்.

இரண்டாம் உலகப்போரில் பத்தாயிரம் பேரைக் காப்பாற்றிய சுரங்கம் இதுதான்!


பகல் தான்... ஆனாலும், அந்த சுரங்கத்தினுள் ஒரு அடர்த்தியான இருள் சூழ்ந்திருக்கிறது. குறுகலான வழி. மெல்லிய பேட்டரி விளக்கு வெளிச்சத்தில் நடந்து, சில படிகளைக் கடந்தால் அந்த அகண்ட இடம் வருகிறது. இப்பொழுது விளக்குகளின் உதவியால் வெளிச்சம் கொஞ்சம் கூடுதலாகக் கிடைக்கிறது. துருப்பிடித்து, இரும்பு தோல்கள் உரிந்த நிலையில் நிறைய கார்கள். சில நீளமாகவும், சிலவை சிறியதாகவும் இருக்கின்றன. தார் சாலைகளையும், மண் மேடுகளையும், கடற்கரைகளையும் பார்த்து ஆவேசமாய், சமயங்களில் அமைதியாய் ஓடிக் களைத்த ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குள். தோலுரிந்து வரலாற்றால் தூக்கி எறியப்பட்ட ஒரு நீல ஸ்கூட்டரின் பக்கவாட்டில்  சிகப்பு வண்ண சுருள் முடி கொண்ட ஒரு பெண்ணின் ஸ்டிக்கர். அவரின் கனவு நாயகியாக இருந்திருக்கக் கூடும்.



இன்னும்... அழுக்கடைந்த அடுப்புகள், கருப்படைந்த பானைகள், உருக்குலைந்த உணவுக் கோப்பைகள், நசுங்கி, நைந்து போயிருக்கும் குழந்தைகளின் குதூகல நடை வண்டிகள் என திரும்பும் திசையெல்லாம் வரலாறு துப்பி எறிந்த மிச்சங்கள். இது இத்தாலி நாட்டின் நேப்பிள்ஸ் நகரின்  " கேலெரியா போர்பொனிகா" (GALLERIA BORBONICA).

 உலக வரலாற்றின் பல முக்கிய ஆதாரங்களைக் கொண்ட பழைய "பாம்பெய்" ( POMPEII)  தான் இன்றைய "நேப்பிள்ஸ்" நகரம் ... மண் தோண்டினால் பொன் கிடைக்கும் பூமி. இரண்டாம் உலகப் போரின் சமயத்தில் பல தேவாலயங்கள் குண்டுத் தாக்குதல்களுக்கு பலியான போது, ஒன்று மட்டும் உறுதியாக நின்றது. போர் முடிந்த பின்பு, அதை ஆராய்ந்த போது, அதற்கடியில் ஒரு நகரமே இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இப்படி, நேப்பிள்ஸில் வீடு கட்ட மண் தோண்டினால் கூட அங்கு ஒரு பொக்கிஷம் கிடைக்கும் அளவிற்கு தன்னுள் வரலாறுகளைப் புதைத்து வைத்துள்ளது.



1853யில், இரண்டாம்  ஃபெர்டினான்ட் போர்பன் (FERDINAND BOURBON - 2 ) போர் சமயங்களில் கோட்டையில் இருந்து தப்பிக்க ஒரு சுரங்கத்தைக் கட்ட ஆரம்பித்தான். ஆனால், அதை கட்டி முடிப்பதற்குள் அவனின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.  சில காலம் நீர் வழித்தடமாக உபயோகப்படுத்தப்பட்டது. இந்த சுரங்கத்தின் ஒரு பகுதியை 2005யில் கண்டுபிடித்து 7 ஆண்டுகளாக சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.

 மேற்கூறிய செய்தியை, 2012 ஆம் ஆண்டில் படித்த தொனினோ பெர்சிகோ (TONINO PERSICO) என்ற 90 வயது முதியவருக்கு திடீரென ஒரு ஞாபகம் வந்தது. இரண்டாம் உலகப் போரின் போது, வான்வழித் தாக்குதலிலிருந்து தப்ப ஒரு சுரங்கத்தில் தான் இருந்தது ஞாபகம் வந்தது. அது குறித்த தகவல்களை சுரங்க ஆராய்ச்சியளர்களிடம் கூறுகிறார். அவர்களும் விரைவிலேயே அந்த இடத்தைக் கண்டுபிடிக்கிறார்கள். அதில் அவர்கள் கண்ட விஷயங்கள் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தின.

1930 களின் ஆரம்பத்தில் வண்டிகள் நிறுத்தும் இடமாக உபயோகப்படுத்தப்பட்ட இந்த சுரங்கம், இரண்டாம் உலகப் போரின் போது மக்களுக்கான பதுங்கும் இடமாக இருந்துள்ளது. கிட்டத்தட்ட பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் இங்கு பதுங்கியிருந்திருக்கின்றனர். மூன்று ஆண்டுகள் சுத்தம் செய்த பிறகு சில மாதங்களுக்கு முன்பு இது பொதுமக்களின் பார்வைக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.



" தாக்குதல் முடிந்த பின்னர் மேல் வந்து பார்ப்போம்... பலரின் வீடுகள் தரைமட்டமாகியிருக்கும். அப்படி வீடிழந்தவர்கள் எல்லோரும் நிரந்தரமாக இந்த சுரங்கத்தில் தான் தங்கியிருப்போம். அதிகப்படியான மருத்துவ உபகரணங்கள் இல்லாவிட்டாலும் கூட, எங்களில் இருக்கும் சில மருத்துவர்கள் மருத்துவம் பார்ப்பார்கள். கழிவறை இருந்தது. கணவன் போரில் ஈடுபட்டிருப்பது குறித்து பெண்கள் வருதத்தோடு பேசிக் கொண்டிருப்பார்கள், குழந்தைகளான நாங்கள் ஒரு பக்கம் விளையாடிக் கொண்டிருப்போம்... சமயங்களில் அழகான பல பாடல்களையும் பாடி மகிழ்வோம்." என்று தன் ஞாபகங்களை தட்டி எழுப்புகிறார் தொனினோ பெர்சிகோ .

" போர் நடக்கும் போது இந்த சுரங்கத்தில் இருந்து மூன்று முறை சங்கு ஊதுவார்கள். அப்படியென்றால், எதிரிப் படை இன்னும் 15 நிமிடங்களில் தாக்குதலைத் தொடங்கும் என்று அர்த்தம். அனைவரும் இதனுள் ஓடிவருவோம்... இன்னும் நினைவிருக்கிறது... அவள் பெயர் "இதினா" ( EDINA )... ரொம்ப அழகாக இருப்பாள். கருப்பு முடி, பச்சைக் கண்கள்... ஒருமுறை இப்படி அவசரமாக ஓடிவரும் போது கூட்டத்தின் கால்களில் சிக்கி... மிதி பட்டு... தரையோடு தரையாய் நசுக்கப்பட்டு இறந்து போனாள்..." என்று வலியோடு தன் நினைவுகளை பதிவு செய்கிறார் டே ஜியோயா (De GIOIA).

வரலாற்றின் வரலாறுகளை சுமந்து கொண்டிருக்கும் இந்த சுரங்கத்தில் இன்னும் கண்டுபிடிக்கப்படாத சில பகுதிகளும் இருக்கின்றன. அதை நோக்கிய தேடுதலில் இருக்கிறார்கள் இத்தாலிய அகழ்வாராய்ச்சியாளர்கள். அதைக் கண்டுபிடித்தால் இன்னும் பல ஆச்சரியங்கள் கிடைக்கும் என்றும் நம்புகிறார்கள். !!!

September 8, 2016

சுருளி அருவி மேம்படுத்த வேண்டும்... சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை!


தேனி மாவட்டத்தில் இயற்கை எழில் கொஞ்சும் சுற்றுலாத்தலமாக விளங்கி வருகிறது, சுருளி அருவி. இது, கம்பம் நகரத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. 40 அடி உயரம் கொண்ட இந்த அருவியில், ஜூன் மாதம் முதல் அக்டோபர் மாதம்வரை நீர்வரத்து அதிகமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகமாக இருக்கும். இங்கு உள்ள சுருளியாண்டவர் கோயில் புகழ்பெற்றது. முப்பத்து முக்கோடி தேவர்களும், ரிஷிகளும் தங்கியிருந்ததாகக் கருதப்படும் கயிலாய மலைக் குகை இங்கு உள்ளது. அங்கு, புண்ணியாதானம் செய்தால் இறந்தவரின் ஆன்மா சாந்தியடைய அவர்கள் உதவுவார்கள் என்கிற நம்பிக்கை உள்ளது. இதனால், இதன் அடிவாரப் பகுதியில் இறந்தவர்களுக்கான இறுதிக்கடன்களில் ஒன்றான புண்ணியாதானம் செய்யும் நிகழ்வுகள் அதிக அளவில் நடைபெறுகின்றன.





இத்துணை சிறப்பு வாய்ந்த சுற்றுலாத்தலத்தில் ஏராளமான குறைகளும் உண்டு. இதுகுறித்து சுற்றுலாப் பயணிகள், ‘‘உணவு உண்ண இடங்கள், நிழற்குடைகள் இல்லை. குழந்தைகள் விளையாடப் பூங்கா இல்லை. மரத்தடியில் உள்ள இருக்கைகள் சேதமடைந்து இருக்கின்றன’’ என்றனர்.

இதுபற்றி அங்குள்ள பணியாளர்களிடம் கேட்டபோது, ``ஆள் பற்றாக்குறையினால் அசுத்தமாக உள்ளது. போதுமான அளவு பராமரிப்பது சிரமமாக உள்ளது. வரும் வருமானத்தில் நான்கு பங்கில் இரண்டு பங்கைத்தான் பராமரிக்கச் செலவிடுகிறார்கள். மற்ற அதிகாரிகளின் உள்ளீடு அதிகமாக இருக்கிறது. கான்ட்ராக்ட் எடுத்துச் செயல்படுவதால் போதிய சம்பளமும் கிடைப்பதில்லை. இதுகுறித்து நாங்கள் பலமுறை மேலிடத்தில் சொல்லியும் அவர்கள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை’’ என்றனர் வருத்தத்தோடு.





இதுகுறித்து வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள், ``இங்குள்ள அருவி எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. இதில் குளித்து முடித்த பின்பு, நான் மீண்டும் பிறந்ததுபோல் உண்ர்கிறேன். ஆனால், இந்த இடம், என் பேரக்குழந்தைகள் காணும் காலம் வரை உயிர்ப்புடன் இருக்குமா என்று தெரியவில்லை.  இயற்கை அழகுமிகுந்த இந்த இடத்தைச் சேதமடையாமல் அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்’’ எனக் கோரிக்கை வைத்தனர்.

இவர்களின் தேவையும் சுருளியின் கனவும் நிறைவேறுமா என்பது நம் அரசிடம்தான் உள்ளது.

July 31, 2016

மலைக்க வைக்கும் மரியானா பள்ளம்... ஆழ்கடல் பயணத்தின் ஆச்சர்ய தகவல்கள் ( பகுதி -1 )


இந்த உலகில் மனிதனின் காலடி படாத இடம் ஆழ்கடல்தான். ஏன் மனிதனின் காலடி பட வாய்ப்பே இல்லாத இடமும், ஆழ்கடல்தான். அது ஏன்? அறிந்து கொள்ள ஆழ்கடலுக்குள் பயணிப்போம் வாருங்கள்...

கண்களுக்கு முழுமையாக தென்படாத, விண்வெளியைப் போன்று எண்ணிலடங்கா ரகசியங்களை தன்னுள் புதைத்து வைத்திருக்கின்றது, ஆழ்கடல்! கடலின் அடியிலும் வெளியிலிருப்பது போல ஏராளமான எரிமலைகள், பள்ளத்தாக்குகள், மாபெரும் மலைத்தொடர்கள், சிறு குன்றுகள் எல்லாம் இருக்கின்றன. கணக்கிலடங்காத எண்ணிக்கையில், கடல் வாழ் விலங்குகள் உயிர் வாழ்கின்றன. ஆனால், அவற்றைப்பற்றி எல்லாம் நாம் முழுமையாக அறிந்து கொண்டோமா என்றால் 'இல்லை' என்பதே பதில்.

பல்வேறு கிரகங்களுக்கு செயற்கைக்கோள்களை அனுப்பி ஆராய்ச்சி செய்து வரும் நாம், நமது பூமியிலிருக்கும் ஆழ்கடலை இன்னும் முழுமையாக ஆராய்ச்சி செய்து முடிக்கவில்லை. ஏனெனில், விண்வெளிப் பயணத்தை விட மிகவும் கடினமானது ஆழ்கடல் பயணம்தான்.

இதற்கு முக்கியக் காரணம், கடலின் அழுத்தம். நாம் கீழே செல்லச் செல்ல நீரின் எடை அதிகரித்து, அந்த எடை எல்லாப் பக்கங்களிலிருந்தும் நம்மை அழுத்தும். பத்து மீட்டர் ஆழத்தில் நீரின் அழுத்தம் இரண்டு மடங்காகி இருக்கும். அவ்வாறு ஒவ்வொரு பத்து மீட்டர் ஆழத்திற்கும் கடலின் அழுத்தமும் இரு மடங்காக, அதிகரித்துக்கொண்டே செல்லும். தவிர, இன்னுமொரு பிரச்னை உண்டு. சூரிய ஒளியானது சுமார் இருநூறு மீட்டர் ஆழம் வரையே ஊடுருவும் என்றாலும், ஆயிரம் மீட்டர் ஆழம் வரை ஓரளவு வெளிச்சம் தெரியும். அதன் பின்னர் கும்மிருட்டுதான்.  

நம்மால் சுவாசக் கருவி அணிந்து கொண்டு ஆயிரம் அடி வரை கூட இறங்க முடியும்.  ஆனால் நீண்ட நேரம் கடலின் ஆழத்தில் இருந்தால், கொப்புளங்கள், மூட்டுவலி போன்ற சில உடல் உபாதைகள் வரும் அபாயம் உண்டு. நீர்மூழ்கிக் கப்பல்கள் கூட ஒரு குறிப்பிட்ட ஆழத்துக்குக் கீழே பயணிக்காது. ஏனெனில், கடல் நீரின் அழுத்தத்தால் நீர்மூழ்கியும் வெடித்துச் சிதறி விட வாய்ப்பிருக்கிறது. இதனாலேயே ஆழ்கடல் குறித்த கேள்விகளுக்கு, வெகுநாட்களுக்கு விடை கிடைக்கவில்லை.

மரியானா அகழி

இந்த உலகிலேயே மிக ஆழமானப் பகுதி, மரியானா அகழியில் அமைந்துள்ள 'சேலஞ்சர் மடு' என்ற பள்ளம் தான். பசிபிக் கடலில் உள்ள ஆரம் போன்ற வளைவான மரியானா தீவுகளுக்குக் கிழக்கே அமைந்துள்ளது, மரியானா அகழி. வளர்பிறை போன்ற வடிவத்தில் அமைந்துள்ளதால், 'மரியானா நீள்வரிப்பள்ளம்' என்று அழைக்கப்படுகின்றது.

இந்த அகழியானது, பசிபிக் நிலத்தகடும், மரியானா நிலத்தகடும் சந்திக்கும் இடத்தில் அமைந்துள்ளது. இது 2550 கிலோ மீட்டர் நீளமும், 69 கிலோ மீட்டர் அகலமும் கொண்டது. இதன் ஆழம் 35,840 அடி  ஆகும். சேலஞ்சர் ஆழப்படுகுழி 36200 அடி  (அதாவது 11034 மீட்டர்) ஆழமுடையது.

உங்கள் ஒற்றை விரல் நகத்தின் மீது ஆயிரம் கிலோ எடையை வைத்தால் எப்படி இருக்கும்? (படிக்கும் போதே வலிக்கிறது அல்லவா?) இப்பகுதியின் நீரினால் ஏற்படும் அழுத்தம் அந்த அளவுக்கு இருக்கும். (அதாவது 1086 பார்கள் அழுத்தம்) சேலஞ்சர் மடுவில் உள்ள நீரின் வெப்பநிலை, அதிகபட்சம் நான்கு டிகிரி செல்சியஸ் வரை. உலகிலேயே மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்ட்டை இதனுள்ளே வைத்தால், அதற்கு பிறகும் ஏழாயிரம் அடி மிச்சமிருக்கும் என்றால், இதன் ஆழத்தைப் புரிந்து கொள்ளலாம்.



மவுன கிய எரிமலை

இந்த சமயத்தில் ஒரு பொது அறிவுத்தகவல்- உலகிலேயே மிக உயரமான இடம் எவரெஸ்ட் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். பொதுவாக உயர அளவீடுகள், கடல் மட்டத்திலிருந்து அளவிடப்படுகின்றன. ஹவாய் தீவிலிருக்கும் 'மவுன கிய' எனும் எரிமலை,  கடல் மட்டத்திலிருந்து சுமார் 13802 அடி உயரம் உடையது. இந்த எரிமலை கடலினுள் அமிழ்ந்துள்ளது. அங்கிருந்து கணக்கிட்டால், இதன் உயரமானது 33000 அடியாகும். எவரெஸ்ட்டின் உயரம் 29029 அடிதான். எனவே உண்மையில், உலகிலேயே உயரமான இடம் மவுன கிய எரிமலைதான். கடல் மட்டத்திலிருந்து மட்டுமே கணக்கீடுகள் எடுக்கப்படுவதால் மவுன கிய எரிமலை அந்தப் பெருமையை எவரெஸ்ட்டிடம் இழந்து விட்டது.

மவுன கிய எரிமலையில் ஏராளமான தொலைநோக்கிகள் நிறுவப்பட்டுள்ளன. நகரங்களின் வெளிச்சம், ஓசை போன்ற மாசுக்கள் இல்லாமல் இந்த எரிமலையின் உச்சியில் நிலவும் சுற்றுப்புறமானது, வானியல் ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் ஏற்றதாக இருக்கிறது.

தற்போது இந்தியா, சீனா, ஜப்பான், அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய ஐந்து நாடுகள் ஒருங்கிணைந்து, சுமார் 140 கோடி அமெரிக்க டாலர் செலவில், உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியை இந்த எரிமலையில் நிறுவி வருகின்றன. இதுதான் உலகின் மிகப்பெரிய தொலைநோக்கியாகும். இதன் மூலம் 500 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் ஒருவரின் சட்டையிலிருக்கும் பட்டனைக் கூட மிகத்துல்லியமாக ஆராய முடியும். இந்த மிகப்பிரம்மாண்ட தொலைநோக்கியின் கட்டுமானம் 2022-ம் ஆண்டுதான் முடியும்.

சிம்போரஸோ எரிமலை

சரி. நாம் மீண்டும் மரியானா அகழிக்கு வருவோம்.

சேலஞ்சர் மடுவின் தரைப்பகுதி, பூமியின் மிக ஆழத்தில் இருந்தாலும், அது பூமியின் மையத்திற்கு அருகில் இல்லை. ஏனென்றால், நமது பூமியின் ஒழுங்கற்ற வடிவமே இதற்கு காரணம். பூமி ஒரு முழுமையான வட்டமானது என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். (பண்டை காலத்தில் உலகம் தட்டையானது என நினைத்துக் கொண்டிருந்தது தனிக்கதை!). ஆனால் பூமியானது ஒரு ஒழுங்கற்ற (சிறிது பேரிக்காய் போன்ற) வடிவத்தில் இருக்கிறது. தன்னைத்தானே சுற்றி வரும் மைய ஈர்ப்பு விசையின் காரணமாக பூமத்திய ரேகைப் பகுதியில் சற்று உப்பிக் காணப்படுகிறது. பூமியின் துருவங்களின் விட்டமானது, பூமி மையத்திற்கு நெருக்கமாக உள்ளது.  இதனால் பூமியின் மையத்திற்கு மிக அருகில் உள்ளது, ஆர்க்டிக் கடலின் தரைப்பகுதியே ஆகும்.

இப்போது மீண்டுமொரு பொது அறிவுத்தகவல்- உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் தானே பூமியின் மையத்திலிருந்து வெகு தொலைவில் இருக்கும் இடமாக இருக்கக் கூடும்? காதைத் தீட்டிக் கொள்ளுங்கள். இப்போது உங்களுக்கு இன்னொரு ரகசியம் சொல்கிறேன். ஈக்குவடாரில் உள்ள சிம்போரஸோ எனும் எரிமலைதான், பூமியின் மையத்திலிருந்து அதிதொலைவு (20548 அடிகள்) உள்ள இடம். காரணம் இப்போது புரிந்திருக்குமே? எவரெஸ்ட்டை (29029 அடிகள்) விட உயரம் குறைவாக இருந்தாலும், இந்த எரிமலையின் அமைவிடமான ஈக்குவடாரில் பூமி உப்பலாகக் காணப்படுவதால் இது சாத்தியமானது.



சரி! இந்த மரியானா பள்ளம் எப்படி ஏற்பட்டது? சுருக்கமாக IBM என்றழைக்கப்படுகின்ற 'ஐஸு-போனின்-மரியானா (Izu-Bonin-Mariana)'  நிலத்தகடுகளினால் உண்டானது. பல மில்லியன் வருடங்களுக்கு முன்பு, பசிபிக் நிலத்தகடும் சிறிய மரியானா நிலத்தகடும் ஒன்றையொன்று மோதிக் கொண்டபோது, பசிபிக் நிலத்தகடானது மரியானாவின் அடியில் சென்றது. இதனால் இந்த மாபெரும் அகழி உருவானது. இது சுமாராக 180 மில்லியன் வருடங்கள் பழமையானது.

மரியானா அகழியின் தரையை தொட்ட சாதனையாளர்கள்

இங்கிலாந்துக் கடற்படையைச் சேர்ந்த சேலஞ்சர் என்ற கப்பல்தான் முதன்முதலில், இந்த இடத்தின் ஆழத்தை 26850 அடி என்று கண்டறிந்து, உலகுக்கு அறிவித்தது. 1875 ம் ஆண்டு ஒலி அதிர்வு முறையில் இதைக் கணித்துச் சொன்னார்கள். இந்தக் கப்பலை பெருமைப்படுத்தும் விதமாகவே, இந்த ஆழ்குழிக்கு 'சேலஞ்சர் படுகுழி' எனப் பெயரிடப்பட்டது. 1995-ம் ஆண்டு, கைகோ என்ற ஆள் இல்லாத நீர்மூழ்கியும் அதன் பின்னர் 2009 ம் ஆண்டு நெரயஸ் என்ற மற்றுமொரு ஆள் இல்லாத நீர்மூழ்கியும் இந்த ஆழத்தை தொட்டுவிட்டு வெற்றியுடன் திரும்பின.

உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட்டைக் கூட ஆயிரக்கணக்கானவர்கள் தொட்டு விட்டு திரும்பியிருக்கிறார்கள். ஆனால், இன்றைய நாள் வரை மரியானா அகழியின் தரை வரை சென்று திரும்பியவர்கள் மூன்றே பேர்தான். அதில் ஒருவர் உலகறிந்த, புகழ்பெற்ற திரைப்பட இயக்குநரான ஜேம்ஸ் கேமரோன். மற்ற இருவர், அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த டான் வால்ஷ் மற்றும் ஜேக்குஸ் பிக்கார்டு ஆவர்.

'அதெப்படி? அதிக ஆழம் செல்லும்போது நீர்மூழ்கி கூட வெடித்துச் சிதற வாய்ப்பிருக்கிறது என்றீர்களே... 'என்பவர்களுக்கு, அதிக ஆழத்தில் நீரின் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய ஒரு கருவியை வடிவமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டபோது கைகொடுத்தவர்தான் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ஜீன் பெலிக்ஸ் பிக்கார்டு. இவர் மேலே சொல்லப்பட்ட இருவரில் ஒருவரான ஜேக்குஸ் பிக்கார்டின் தந்தையாவார்.

இவர் பலூனில் பறந்து பல சாதனைகளை படைத்தவர். அவ்வாறு பலூனில் பறப்பதற்காக வடிவமைத்திருந்த கருவியில், நீர்க்குமிழியின் தத்துவத்தைப் பயன்படுத்தி, சிறிய மாற்றங்களைச் செய்து கடல் நீரின் அழுத்தத்தைத் தாங்கக்கூடிய ஒரு கருவியை வடிவமைத்தார். எடை குறைவாகக் காணும் இயல்புடைய திரவத்தை, ஒரு தொட்டியில் கேப்ஸ்யூல் வடிவிலான ஒரு இரும்பு உருளையின் மேல் அடைத்து, ஆழ்கடலுக்குள் செல்ல ஏதுவாக இரும்பு பட்டைகளையும், மேலே எழும்பி வருவதற்காக மின் மோட்டாரையும் இணைத்தார். ஆளில்லாமல் அனுப்பி பல முறை சோதனை செய்து வெற்றி கண்டார்.

இந்தக்கருவி, அதற்கு பிறகு பலரால் இன்னும் மேம்படுத்தப்பட்டது. முதன்முறையாக ஒரு மனிதனை ஏற்றிக்கொண்டு 13701 அடி ஆழம் வரைச் சென்று, சோதனையில் வெற்றியும் காணப்பட்டது. ஆனால், அதிக ஆழம் செல்வதற்கு இன்னும் மேம்படுத்தப்பட வேண்டியிருந்தது. பல்வேறு சோதனைகளுக்கு பிறகு 1960-ம் ஆண்டு, தங்களது எட்டாவது முயற்சியில், மரியானா படுகுழிக்கு உள்ளே புகுந்தனர் ஜீன் பெலிக்ஸ் பிக்கார்டின் மகனான ஜேக்குஸ் பிக்கார்டும், அமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த கேப்டன் டான் வால்ஷ் என்பவரும்.

அவர்கள் சென்ற நீர்முழ்கியின் பெயர் ட்ரெயிஸ்ட். அதில் இரண்டு மின் மோட்டார்கள் பொருத்தப்பட்டிருந்தன. வினாடிக்கு 0.914 நாட் என்ற வேகத்தில் அவர்கள் பயணித்தனர். வான்டன் எனும் அமெரிக்கப் போர்க்கப்பல், அவர்கள் பயணித்த பேத்திஸ்க்கோப் ட்ரெயிஸ்டியுடன் தொடர்பிலிருந்தது. அந்தக் காலத்தில் பயன்படுத்தப்பட்ட கருவியின் மூலம் ஏழு வினாடிகள் கழித்துதான் தகவல் பரிமாறிக் கொள்ளப்பட்டது.



32500 அடிகள் இறங்கியிருந்தபோது, வெளிப்புறத்தில் ஏதோ சத்தம் கேட்டது. அதே நேரம் அவர்கள் இருந்த அறை குலுங்கியது. "நாம் தரையைத் தொட்டு விட்டோமோ?" என்றார் வால்ஷ்.

"இல்லையே, ஆழம் காட்டும் கருவியில் அவ்வாறு காட்டப்படவில்லையே" என்றார் பிக்கார்ட்.

அவர்களின் கலம் மெதுவாக கீழிறங்கிக் கொண்டிருந்தது. கீழே தரை தென்படவில்லை.

ஒருவேளை ஏதேனும் பெரிய கடல்மிருகத்தை மோதி விட்டோமோ? இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

அவர்களின் எதிரிலிருந்த கருவிகள் எல்லாம் எந்தவித தவறையும் காட்டவில்லை. உடனே பிராண வாயு உள் செலுத்தும் கருவி உள்பட, ஒலி எழுப்பக்கூடிய கருவிகள் அனைத்தையும் சிறிது நேரம் நிறுத்தி வைத்தனர். அந்த மயான அமைதியிலும், வெளிப்புறத்திலிருந்து எதுவோ உடைவது போன்ற ‘க்ரீச், க்ரீச்’ எனும் சப்தம் கேட்டுக்கொண்டே இருந்தது.

இந்த சந்தர்ப்பத்தில், உயிரைப் பணயம் வைத்து தொடர்ந்து கீழே செல்வது, இல்லையெனில் திரும்ப சென்று விடுவது என்று இரண்டே வாய்ப்புகள் அவர்களிடத்திலிருந்தன. அவர்கள் தேர்ந்தெடுத்தது முதலாவது வாய்ப்பை. தொடர்ந்து பயணித்து அவர்கள் மரியானா அகழியின் ஆழத்தை (35,797 அடி) அடைந்தனர். கிட்டத்தட்ட ஐந்து மணி நேர பயணத்தில் ஆழத்தைத் தொட்டு விட்டனர். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மகத்தான சாதனை செய்யப்பட்டு விட்டது.

ஆனால் அவர்கள் உணர்ந்த அந்த சத்தம் மட்டும் என்னவென்று தெரியவில்லை. வெளியே பார்க்க உதவும் துளை வழியே எட்டிப் பார்த்தார் வால்ஷ். அவர்களுக்கும் வெளிப்புற நீரின் அழுத்தத்திற்கும் இடையே இரு கண்ணாடிகள் மட்டுமே உண்டு.

"அந்த சத்தம் எங்கிருந்து வந்தது தெரியுமா... கண்டுபிடித்து விட்டேன்." என்றார் புன்முறுவலுடன்.

வெளியே பார்க்க உதவும் கண்ணாடிகளில், வெளிப்புறக் கண்ணாடி விரிசல் விட்டிருந்திருக்கிறது. அந்த விரிசலின் ஒலியையே அவர்கள் கேட்டிருந்திருக்கிறார்கள். அந்த விரிசல் மட்டும் பெரிதாகி உடைந்து, உள்ளிருக்கும் கண்ணாடியும் உடைந்திருந்தால் இருவரும் உயிருடன் தப்பித்திருக்க முடியாது. சில சரித்திரச் சாதனைகள் படைக்கப்படும்போது, சோதனைகளும் தாமாக விலகி விடுகின்றன போலும்.

July 30, 2016

கட்டிட சிலாப் இடிந்ததால் 13–வது மாடியில் இருந்து விழுந்தனர் 9 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி புனேயில் துயர சம்பவம்


புனேயில், கட்டுமான பணிகள் நடந்து வரும் கட்டிடத்தின் 13–வது மாடியின் ‘சிலாப்’ இடிந்து விழுந்து 9 தொழிலாளர்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

இந்த துயர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:–

கட்டிட சிலாப் இடிந்தது
மராட்டிய மாநிலம் புனே பிம்ப்ரி–சிஞ்ச்வாட்டில் உள்ள பாலேவாடி பகுதியில் ‘பார்க் எக்ஸ்பிரஸ்’ என்ற அடுக்குமாடி கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் 12 மாடிகள் கட்டி முடிக்கப்பட்டு தற்போது 13–வது மாடி கட்டும் பணிகள் துரிதமாக நடந்து வந்தது.

நேற்று அந்த மாடியில் வழக்கம்போல் கட்டுமான பணி நடந்து கொண்டிருந்தது. மாடியில் உள்ள பெரிய சிலாப்பில் மேற்பூச்சு செய்யும் பணியில் 11 கட்டுமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

காலை 11 மணியளவில் தொழிலாளர்கள் நின்று வேலை செய்து கொண்டிருந்த அந்த சிலாப் திடீரென இடிந்து விழுந்தது. இதில், தொழிலாளர்கள் அனைவரும் கீழே விழுந்தனர். இடிபாடுகள் அவர்கள் மீது விழுந்து அமுக்கியது.

உயிரோடு சமாதி
இந்த சம்பவத்தில் இடிபாடுகளில் சிக்கி 8 பேர் உயிரோடு சமாதியாகினர். அவர்களது உடல்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு சிதைந்தன. மற்ற 3 பேரும் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்தனர்.

இந்த பயங்கர சம்பவம் பற்றி அறிந்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளை அகற்றி உள்ளே சிக்கியிருந்தவர்களை மீட்டனர். இதற்கிடையே ஆம்புலன்சுகளும் அங்கு வந்து சேர்ந்தன.

மீட்கப்பட்ட 3 பேரும் ஆம்புலன்சுகளில் ஏற்றப்பட்டு புனே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மேயர் விரைந்தார்
மற்ற 2 தொழிலாளர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பலியானவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டன.

தொடர்ந்து, இடிபாடுகளை அகற்றும் பணி துரிதமாக நடந்தது. மேலும் இடிபாடுகளில் வேறு யாரேனும் சிக்கி உள்ளனரா? என்பதை கண்டறிய தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்த கட்டிட விபத்து பற்றி அறிந்ததும் புனே மேயர் பிரசாந்த் ஜக்தாப் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

போலீஸ் விசாரணை
சிலாப் இடிந்து 9 பேரை பலி கொண்ட கட்டிடம் 11 மாடிகள் மட்டுமே கட்டுவதற்கு மாநகராட்சியிடம் இருந்து அனுமதி பெறப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த கட்டிடத்தை கட்டி வரும் கட்டுமான அதிபர் விதிமுறைகளை மீறி கட்டிடத்தை 13–வது மாடி வரையிலும் உயர்த்தி கட்டி இருக்கிறார்.

இந்த விபத்தை தொடர்ந்து அந்த கட்டிடத்தின் கட்டுமான பணிகளுக்கு புனே மாநகராட்சி அதிரடியாக தடை விதித்தது. மேலும் இந்த கட்டிட விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் புனே மாநகராட்சி கமிஷனர் குணால் குமார் தெரிவித்தார்.

முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் ஏதும் இன்றி தொழிலாளர்களை கட்டுமான பணியில் ஈடுபடுத்தியதே இந்த விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழக்க முக்கிய காரணம் என போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து அப்பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோ மகிழ்ச்சியான தருணத்தில் மணமகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி


முன்னணி புகைப்பட கலைஞர் லியூங் ஐஸ்லாந்தில் உள்ள ஒரு இடத்திற்கு திருமண ஜோடிகளை அழைத்துச் சென்று விதவிதமான புகைப்படத்தை எடுத்துள்ளார்.

அப்போது திடீரென விமானம் ஒன்று மணமகளின் தலையில் மோதி சென்றுள்ளது.

இதனை சற்றும் எதிர்பாராத மணமகள், அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார், இதுதொடர்பான வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.விமானம் வரும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் குறித்த பெண் கண்களை மூடிக் கொண்டும்

கைகளை பின்னால் வைத்துக் கொண்டும் போஸ் கொடுத்துள்ளார்.குறித்த புகைப்பட கலைஞன் உலகில் உள்ள புகழ்பெற்ற 30 புகைப்பட கலைஞர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.



சாலையில் மீன்பிடித்த இளைஞர்கள் (வீடியோ)


பெங்களூரில் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதில் சிலர் வலை விரித்து மீன்பிடித்து கொண்டிருகின்றனர்.

பெங்களூரில் பெய்த கனமழையால் பொம்மனஹள்ளி உள்ளிட்ட சில பகுதிகள் வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏரி நிரம்பி வழிவதால் அதில் இருந்த மீன்கள் சாலைக்கு வர, அதை அந்த பகுதி இளைஞர்கள் வலை விரித்து பிடித்தனர்.


இரவு முழுவதும் கொட்டித் தீர்த்தது பெங்களூருவை புரட்டிப்போட்ட கனமழை அடுக்குமாடி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது; படகுகள் மூலம் மீட்பு பணி


பெங்களூருவில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை கொட்டித்தீர்த்த கனமழை பெங்களூரு நகரை புரட்டிப்போட்டது. நகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. அடுக்குமாடி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு சிக்கிவயர்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.

38 மில்லி மீட்டர் மழை
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கி பெய்து வருகிறது. ஆனால் பெங்களூருவில் கடந்த வாரம் வரை சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய மழை பெய்யவில்லை. இந்த நிலையில் கடந்த 4 நாட்களாக நகரில் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு மழை பெய்யத் தொடங்கியது.

நேற்று காலை வரை இடைவிடாமல் விடிய, விடிய மழை கொட்டித்தீர்த்ததால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. நகரில் கோடிசிக்கனஹள்ளி, விஜயா வங்கி காலனி உள்பட பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. ஒரேநாள் இரவில் சுமார் 38 மில்லி மீட்டர் மழை பெய்ததாக வானிலை ஆய்வு மைய அதிகரிகள் தெரிவித்தனர்.

மழை நீருடன் கழிவு நீரும்...
மடிவாளா ஏரி நிரம்பி அதில் இருந்து உபரி நீர் வெளியேறி அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்தது. மழை நீருடன் கழிவு நீரும் கலந்து வீடுகளில் 3 முதல் 4 அடி உயரத்திற்கு தேங்கி நின்றது. இதனால் அதில் குடியிருந்த மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். சில வீடுகளுக்கு அழையா விருந்தாளியாக பாம்புகளும் வந்தன. மேலும் மடிவாளா ஏரி தண்ணீர் ஓசூர் சாலையிலும் நுழைந்தது. அந்த சாலையில் தண்ணீர் முழங்கால் உயரத்திற்கு தேங்கி நின்றதால் வாகனங்கள் தட்டு தடுமாறி சென்றன. ரோடு எங்கு இருக்கிறது என்று தெரியாமல் ஓட்டுனர்கள் தவித்தனர்.

பெங்களூரு பொம்மனஹள்ளி பகுதியில் உள்ள கோடிசிக்கனஹள்ளி பகுததியில் உள்ள ஏரியும் நிரம்பி வழிந்தது. ஏரி நிரம்பியதால் அதில் இருந்து வெளியேறிய உபரி நீர் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகளை சூழ்ந்து கொண்டது. அந்த பகுதியில் சுமார் 5 அடிக்கும் மேல் தண்ணீர் தேங்கியது. இதனால் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிக்கும் பொதுமக்கள் வீட்டில் இருந்து வெளியேற முடியவில்லை. அங்குள்ள சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார்கள், இரண்டு சக்கர வாகனங்கள் மழைநீரில் மூழ்கின.

கர்ப்பிணி பெண்ணை மீட்டனர்
அங்கு அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கித் தவித்த நிறைமாத கர்ப்பிணி பெண்ணை தீயணைப்பு படையினர் படகில் சென்று மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் அதே பகுதியில் சிக்கி தவித்த நூற்றுக்கணக்கான மக்களை படகு மூலம் மீட்பு படையினர் மீட்டனர். அந்த பகுதிய மக்கள் வீட்டில் இருந்து தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு மூட்டை முடிச்சுகளுடன் படகில் பாதுகாப்பான இடத்திற்கு வந்து சேர்ந்தனர். மழை வெள்ளம் சூழ்ந்ததால் அந்தப் பகுதியே தீவாக மாறியது.

மேலும் தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் படகில் உணவு பொருட்களை எடுத்து சென்று அங்குள்ள மக்களுக்கு கொடுத்தனர். குடிதண்ணீர், பிஸ்கெட் பாக்கெட்டுகள், பால் மற்றும் உணவு பொட்டலங்களை மீட்பு குழுவினர் படகில் சென்று வழங்கினர். அதேபோல் பி.டி.எம். லே–அவுட் 34–வது மெயினில் இருந்து 39–வது மெயின் வரைக்கும் 3 அடி உயரத்திற்கு மழை நீர் தேங்கி நின்றது. எலெக்ட்ரானிக் சிட்டி, தொட்டனேகுந்தி, காரேபாளையா உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. மழை நீர் தேங்கிய பகுதிகளில் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

மேயர் மஞ்சுநாத்ரெட்டி
ஏரிகளில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு கரைபுரண்டு வந்த தண்ணீரில் மீன்களும் மிதந்து வந்தன. சிலர் அந்த மீன்களை ஆர்வமாக பிடித்தனர். மாரத்தஹள்ளி மற்றும் எச்.ஏ.எல். பகுதிகளில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் கார்கள் உள்பட 5–க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதம் அடைந்தன. நேற்று பகல் முழுவதும் மழை தூறல் விழுந்தபடியே இருந்தது.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மேயர் மஞ்சுநாத்ரெட்டி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஜெயநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் 10–க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன. சுரங்க பாதையில் மழை நீர் தேங்கியது, சாலைகளில் மரங்கள் சாய்ந்து விழுந்தது, சாலையில் அரிப்பு போன்ற காரணங்களால் பெங்களூரு நகர் முழுவதும் நேற்று கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நகர முடியாமல் சாலைகளில் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன. ஆமை வேகத்தில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் நேற்று காலையில் அலுவலகங்களுக்கு செல்வோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மழை நீடிக்கும்
போக்குவரத்தை சரிசெய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். பெங்களூருவை புரட்டிப்போட்ட இந்த கனமழை, சென்னை வெள்ளத்தை நினைவுபடுத்துவதாக இருந்ததாக மக்கள் பேசிக் கொண்டனர். பெங்களூருவில் அடுத்த சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்பு படை அதிகாரி வரதராஜூ கூறுகையில், “மழை அதிகமாக பெய்ததால் மடிவாளா ஏரியில் இருந்து தண்ணீர் அதிகமாக வெளியேறி குடியிருப்பு பகுதிகளில் புகுந்துவிட்டது. இதனால் அடுக்குமாடி கட்டிடங்களில் சிக்கியவர்களை நாங்கள் மீட்டுள்ளோம். மேலும் மழை வராமல் இருந்தால் இன்னும் சில மணி நேரங்களில் தண்ணீர் வடிந்துவிடும். ஒருவேளை மீண்டும் மழை அதிகமாக வந்தால் குடியிருப்பு பகுதிகளுக்குள் இன்னும் தண்ணீர் அதிகமாக வரும் நிலை ஏற்படும். 6 மீட்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. நகரில் எங்காவது தண்ணீர் அதிகமாக தேங்கி பாதிக்கப்பட்டால் அதுபற்றி எங்களுக்கு தகவல் தெரிவிக்கலாம். நாங்கள் உடனே அந்த இடத்திற்கு சென்று தேவையான உதவிகளை செய்ய தயாராக உள்ளோம்“ என்றார்.

July 28, 2016

இலவசமாக பயணிகளை ஏற்றிச் செல்லும் ஆட்டோ டிரைவர்


சென்னையை  சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர், இலவசமாக பயணிகளை ஏற்றிச் சென்று அப்துல்கலாமிற்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.


மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மனதிலும் நிறைந்த அப்துல்கலாமுக்கு அனைவரும் இதய அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் தேனாம்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கலையரசன், அப்துல்கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இன்று ஒருநாள் மட்டும் தனது ஆட்டோவில் பயணிகளை இலவசமாக சவாரி ஏற்றிச் செல்கிறார். இது தொடர்பான துண்டு பிரசுரத்தை தனது ஆட்டோவில் அவர் ஒட்டி இருக்கிறார். அதில்,

“நான் விட்டுச்சென்ற பணியை தொடருங்கள் மாணவ செல்வங்களே!!

- டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்.

27.7.2016 இன்று ஒரு நாள் மட்டும் ஆட்டோவில் இலவசமாக பயணியுங்கள்”

இந்த ஆட்டோ டிரைவர், கடந்த ஆண்டு, அப்துல் கலாம் மறைந்த போதும் இதே போல் பயணிகளை இலவசமாக ஏற்றிச்சென்று அஞ்சலி செலுத்தினார்.

July 27, 2016

அரசுப் பள்ளியில் மது விருந்து; 12 மாணவர்கள் கொண்டாட்டம்; ஆசிரியர்கள் அதிர்ச்சி


வேலூர் மாவடம், அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 12 மாணவர்கள் பள்ளி வள்ளகத்தில் உள்ளேயே மது அருந்தி கொண்டாடியுள்ளனர். இது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கடந்த வெள்ளிக்கிழமை மதியம் மேல்நிலை முதல் குரூப் வகுப்புக்கு வந்த மாணவர்களுக்கு ஆசிரியை பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது பின் வரிசையிலும், நடுவரிசையிலும் அமர்ந்திருந்த மாணவர்கள் சிலர் தேவையில்லாத சந்தேகங்களை எழுப்பிக் கொண்டே இருந்துள்ளனர்.

அவர்கள் நடவடிக்கையில் சந்தேகமடைந்த ஆசிரியை, அதுகுறித்து காரணம் அறிய அருகில் சென்றுள்ளார். அப்போது அவர்கள் மது அருந்தியிருந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவர், தலைமை ஆசிரியரிடம் புகார் செய்துள்ளார்.

அதில் 12 பேர் மது அருந்தியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த 12 பேரையும் வகுப்பில் இருந்து வெளியேற்றிய தலைமை ஆசிரியர், காலையில் நல்ல முறையில் இருந்த மாணவர்கள், மதியம் மது அருந்தியிருந்தது எப்படி என விசாரித்துள்ளார்.

இதில், அந்த மாணவர்களில் ஒருவருக்கு அன்று பிறந்த நாள் என்பதும், இதையடுத்து அந்த குறிப்பிட்ட மாணவர், பள்ளி வளாகத்தில் பயனற்ற நிலையில் உள்ள கட்டடத்துக்குள் மற்ற 11 மாணவர்களையும் அழைத்துச் சென்று மது விருந்து வைத்ததும் தெரியவந்தது.

இந்த மாணவர்களில் 4 பேர் வகுப்பில் முதல் மதிப்பெண் பெறுவோர் என்பதும், மற்றவர்கள் சாதாரண மதிப்பெண் பெறுவோர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

July 26, 2016

பீகாரில் பாம்புகளுடன் வாழும் கிராமமக்கள்


பீகார் மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில், பொதுமக்கள் பாம்புகளுடன் வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் பீகார் மாநிலத்தில் உள்ள சமஸ்திபூர் கிராமம், பாம்புகளை விளையாட்டு பொருளாக கருதி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு பாம்பு கடித்து மரணம் ஏற்பட்டதே இல்லை என்பது ஆச்சரியமான ஒன்றாகத் தான் இருக்கிறது. குறிப்பாக நாக பஞ்சமி நாளில், கிராம மக்கள் பாம்புகளை பொம்மைகள் போன்று பிடித்து விளையாடுகின்றனர்.

இதுகுறித்து கிராம மக்களிடம் கேட்டதற்கு, தங்களுக்கு பகவதி அம்மனின் அருள் இருப்பதாகவும், அதனால் பாம்புகளால் எந்தவித தீங்கும் ஏற்பட்டதே இல்லை என்று கூறுகின்றனர். சமஸ்திபூர் கிராமத்தில் இருந்து 23 கி.மீ தொலைவில் உள்ள சிந்தியா காட் பகுதியில், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் பாம்புகளை வீட்டுப் பிராணிகளை போல வளர்த்து வருகின்றனர்.

நாகப் பாம்பு மிகவும் விஷமிக்கது என்று கூறக் கேட்டிருப்போம். ஆனால் அந்த நாகப்பாம்புகளுடனும் எந்தவித அச்ச உணர்வும் இன்றி விளையாடுகிறார்கள், வாழ்கிறார்கள். நாகபஞ்சமி நாளில் பாம்புகள் பிடிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இதனை கடந்த 300 ஆண்டுகளாக பின்பற்றி வருகின்றனர்.

இந்த நாளில் தங்கள் தெய்வத்திடம், எதை வேண்டினாலும் அது நிறைவேறும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

காணாமல் போன மாவட்ட எம்.எல்.ஏ : கலெக்டரிடம் மனு கொடுத்த மக்கள்


தங்கள் பகுதி எம்.எல்.ஏ-வை காணவில்லை என்று கரூர் மாவட்ட மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்த விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ கீதா ஆவார். இவர் ஏற்கனவே கரூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக கீதா மணிவண்ணன் என்ற பெயரில் இருந்து வந்த நிலையில்., இவரது கணவர் மணிவண்ணன் நெரூர் வடபாகம் பஞ்சாயத்து நிதியில் மோசடி செய்ததாக கூறி, கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அப்போதைய மாவட்ட ஆட்சியர் ஜெயந்தியால் பஞ்சாயத்து தலைவர் பதவியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார்.

இந்நிலையில் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் கரூர் மாவட்ட பஞ்சாயத்து தலைவராக பணியாற்றிய கீதா மணிவண்ணனை, கீதா என்று பெயரை சுருக்கி, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ அ.தி.மு.க வேட்பாளராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.

இவர் அறிவிப்பையடுத்து அனைத்து பகுதிகளிலும் கீதா மணிவண்ணன் என்ற பெயர் கீதா என்று மாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில் ஏற்கனவே பெயர் சர்ச்சையில் சிக்கிய எம்.எல்.ஏ கீதா, வாக்குகள் சேகரிக்கும் போதுதான் மக்களை தேடி வந்தார் என்றும், தற்போது நன்றி தெரிவிக்க கூட வரவில்லை என்றும், மக்களின் குறைகளை கேட்க கூட எம்.எல்.ஏ கீதா இப்பகுதிக்கு வரவில்லை என்றும், திடீரென்று குற்றம் சாட்டி, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு தெரிவித்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.




கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தொகுதிக்குட்பட்ட, கடவூர் தாலுக்காவிற்குட்பட்ட பசுபதிபாளையம் பகுதியில் எந்த வித அடிப்படை வசதிகளையும் எம்.எல்.ஏ செய்து தரவில்லை, தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சின்னத்தை நம்பிதான் நாங்கள் வாக்குகள் அளித்தோம், ஆனால் தற்போது அவர் காணாமல் போய் விட்டார் என்றும் குற்றம் கூறி மனு கொடுக்கப்பட்டது.

மேலும் தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கின்றதே எப்படி எம்.எல்.ஏ வர முடியும் என்று பொதுமக்களிடம் கேட்டதற்கு ”இப்போதுதான் பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கிறது. அதற்கு முன்னர், ஏன் நேற்று ஞாயிறு, நேற்று முன் தினம் சனிக்கிழமை அப்போது மற்றும் பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்னர் எங்கே சென்றார் எம்.எ.ஏ? நாங்கள், கீதாவோ, கீதா மணிவண்ணனையோ நம்பி வாக்களிக்க வில்லை. அம்மாவின் சின்னத்தையும், அம்மாவின் சாதனைகளையும் புரிந்து தான் வாக்களித்தோம், தற்போது அவருக்கு அமைச்சர் பதவி கிடைக்க வில்லை என்பதற்காக எங்களை பழிவாங்குவது போல் செயல்படுகின்றார்.

அ.தி.மு.க கட்சிக்கு என்று ஒரு புதிய கட்டுக் கோப்பு உள்ளது. இவர் அ.தி.மு.க வின் மரபுகளை மீறியும், அ.தி.மு.க வையும், அம்மாவின் புகழை அளிக்கும் வகையில் இவர் செயல்பட்டு வருகிறார்” என்று அவர்கள் கூறினர்.

மேலும், அப்பகுதி மக்கள் விரைவில் அப்பகுதி சார்பில் அ.தி.மு.க எம்.எல்.ஏ விற்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை நடத்த உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தார்கள். மேலும் ”ஏற்கனவே எம்.எல்.ஏ வாக இருந்த இதே அ.தி.மு.க வை சார்ந்த எஸ்.காமராஜ், தனது மாத சம்பளத் தொகைகளை ஏழை, எளியவர்களுக்கெல்லாம் கொடுத்து வாரம் ஒரு முறை எங்களை வந்து பார்ப்பார். ஆனால் இவரை கேட்டால் எதுவும் தெரியவில்லை” என்கின்றன் அப்பகுதி மக்கள்.